அலோர் காஜா, மார்ச் 26 - மலாக்கா, கெலிமாக் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்புறம் புதைக்கப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், 19 வயது இளம்பெண் உட்பட ஐந்து பேர் நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த இளம் பெண்ணே அந்தச் சிசுவின் தாய் என நம்பப்படும் நிலையில், இந்த அதிர்ச்சிச் சம்பவத்தை விசாரிப்பதற்காக அலோர் காஜா மாகாண நீதிமன்ற நீதிபதி கமருல் அரிஸ் கமாலுடின் இந்தத் தடுப்புக் காவல் உத்தரவை இன்று பிறப்பித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 318-வது பிரிவின் கீழ், அதாவது பிறப்பை மறைத்தல் எனும் குற்றச்சாட்டின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் அந்த இளம்பெண்ணின் காதலன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், அக்காள் மற்றும் தம்பி ஆகியோரும் அடங்குவர்.
16 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த ஐந்து சந்தேக நபர்களும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 8:50 மணியளவில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே அந்தச் சிசு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், நேற்று அந்த வீட்டின் முன்புறம் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்த தீவிர விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








