ஷா ஆலம், மார்ச் 26 - சுங்கை பட்டாணி, மெர்போக்கில் உள்ள கம்போங் பெலாவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 65 மற்றும் 53 வயதுடைய தம்பதியினர் என்றும், அவர்களுடன் 29 வயதுடைய அவர்களது மகனும் பிணமாக மீட்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர்களது உடல்கள் காவல்துறையினராலும் கிராம மக்களாலும் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழப்பிற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனையின் (HSB) தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேல் விபரங்களை வெளியிடுவதற்காக, கோலா மூடா மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஹன்யான் ரம்லான் இன்று நண்பகல் 12 மணியளவில் மெர்போக் காவல் நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.








