நாட்டில் அதிகளவிலான திவால் வழக்குகள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன -  ஆசிரியர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

19 ஜனவரி 2026, 8:30 AM
நாட்டில் அதிகளவிலான திவால் வழக்குகள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன -  ஆசிரியர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஜாசின், ஜன 19 - நாட்டில் அதிகளவிலான திவால் (கெபாங்க்ரபான்) வழக்குகள் பதிவாகியுள்ள மாநிலமாக சிலாங்கூர் உள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அரசுப் பணியாளர்களில் ஆசிரியர்களும் அடங்குவர் என மலேசிய திவால் துறை (MDI) தலைமை இயக்குநர் டத்தோ’ இஷாக் பக்ரி தெரிவித்தார்.

அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதிக அளவிலான தனிப்பட்ட கடன் (personal loan) பொறுப்புகள் ஆகும். மேலும், திரட்டப்பட்ட தரவுகள் மற்றும் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட நிதி திறன் (financial literacy) திட்டங்களின் அடிப்படையில், நிலையான வருமானம் கொண்டவர்கள் திவால் அபாயத்திற்கு அதிகமாக உள்ளாகின்றனர் என அவர் கூறினார்.

“ஆசிரியர்கள் போன்ற நிலையான வருமானம் கொண்டவர்கள் தனிப்பட்ட கடன்களை எளிதில் பெற முடியும். அவர்கள் நிதி பொறுப்புகளை விவேகமாக நிர்வகிக்கத் தவறி, அதிக அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

“நிலையான வருமானம் இருப்பதால் கடன் அணுகல் எளிதாக உள்ளது. ஆனால், கடன் பொறுப்புகள் கட்டுப்பாடின்றி போனால், அது நீண்டகால நிதி அழுத்தத்தை உருவாக்கும்,” என்றார் அவர்.

போலிடெக்னிக் மெர்லிமாவ் மலாக்கா (PMM) வளாகத்தில் நடைபெற்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்த நிதி திறன் திட்டத்தைத் தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு 200,000 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட முக்கிய செயல்திறன் குறியீடு (KPI) இலக்கை மீறி சாதனை படைக்கப்பட்டதாகவும் இஷாக் கூறினார்.

தற்போது நாட்டின் திவால் அமைப்பு தண்டனை நோக்கமுடையதாக இல்லாமல், நலன் மற்றும் மீட்பு அம்சங்களில் கவனம் செலுத்துவதாகவும், இது மக்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கும் அரசின் கொள்கைக்கு ஏற்ப அமைகிறது என்றும் அவர் விளக்கினார்.

“முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்று 2023ஆம் ஆண்டு திவால் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். இதன் மூலம், இரண்டாவது வாய்ப்பு கொள்கை கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், நீதிமன்ற உத்தரவு இன்றியே திவாலான நபர்களை விடுவிக்க தலைமை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

விடுவிப்பு அளவுகோள்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்டகாலமாக தொடரும் திவால் வழக்குகள் மற்றும் மனநலப் பிரச்சனைகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் ஆகியோர் அடங்குவதாக இஷாக் தெரிவித்தார்.

“திவால் விடுவிப்புக்கான அளவுகோள்களில் மனநல அம்சத்தை சேர்த்துள்ள ஆரம்ப நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். மருத்துவர்கள் குழு ரகசியமாக உறுதிப்படுத்தினால், உடனடியாக விடுவிப்பு வழங்க முடியும்,” என்றார் அவர்.

மேலும், தனிப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் ஒற்றைத் தாய்மார்கள், நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மைக்ரோ கடன் பெற்றவர்கள் ஆகியோருக்காக விரைவு நடைமுறை (fast-track) வழியாக புதிய திவால் விடுவிப்பு அளவுகோள்களை அறிமுகப்படுத்த மலேசிய திவால் துறை திட்டமிட்டுள்ளதாகவும் இஷாக் கூறினார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619