ஷா ஆலம், மார்ச் 20 – எதிர்வரும் ஹரிராயா ஐடில்பித்ரி பெருநாளை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் 'ரஹ்மா மலிவு விற்பனை' (JER) திட்டத்திற்கு தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு விற்பனைத் திட்டம் நேற்று மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி எதிர்வரும் மார்ச் 25-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருநாள் கொண்டாட்டங்களுக்காகப் பணியாளர்களுக்கு விடுப்பு வழங்குவதையும், சேவையின் சீரான தன்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 26-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் வழக்கம் போல ரஹ்மா விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் (PKPS) இணைந்து இந்தத் திட்டம் வியூக ரீதியில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் மலேசிய மக்கள் அனைவருக்கும் தங்களது இனிய ஹரி ராயா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்தப் பெருநாளை அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் கொண்டாட வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டில், ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டத்தைச் சிறப்பாகக் கையாண்டதற்காகச் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் 'தரமான மேலாண்மை விருதை' வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, மலேசியாவிலேயே மிகப் பெரிய அளவிலான மானிய விலை விற்பனையை ஏற்பாடு செய்ததற்காக இந்த அமைப்பு 'மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனையில் இடம்பெற்றுள்ளது என்பதும் நினைவுகூரத்தக்கது.








