ஷா ஆலம், மார்ச் 25 - ஹரிராயா ஐடில்பித்ரி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குவிந்திருந்த வீட்டுக்கழிவுகளில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாகக் கே.டி.இ.பி கழிவு மேலாண்மை நிறுவனம் (KDEBWM) தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, எட்டு உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிப்புப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, அம்பாங் ஜெயா நகராட்சி (MPAJ), சிப்பாங் நகராட்சி (MPSepang), உலு சிலாங்கூர் நகராட்சி (MPHS) மற்றும் சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் (MDSB) ஆகிய பகுதிகளில் 100 விழுக்காடு குப்பைகளும் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன.
இதனைத் தொடர்ந்து, கிள்ளான் அரச மாநகர மன்றம் (MBDK) 99 விழுக்காடு, பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றம் (MBPJ) 98 விழுக்காடு, செலாயாங் நகராட்சி (MPS) 96 விழுக்காடு மற்றும் ஷா ஆலம் மாநகர மன்றம் (MBSA) 95 விழுக்காடு என்ற அளவில் குப்பை சேகரிப்புப் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.
இதற்கிடையில், கோலா சிலாங்கூர் நகராட்சி (MPKS) பகுதியில் 90 விழுக்காடும், காஜாங் நகராட்சி (MPKj) பகுதியில் 89 விழுக்காடும், கோலா லங்காட் நகராட்சி (MPKL) பகுதியில் 88 விழுக்காடும் மற்றும் சுபாங் ஜெயா மாநகர மன்ற (MBSJ) எல்லையில் 85 விழுக்காடு குப்பைகளும் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பண்டிகைக் காலம் முழுவதும் தூய்மைப் பணிகள் தொய்வின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கே.டி.இ.பி உறுதி அளித்துள்ளது.
பண்டிகைக் கால திறந்த இல்ல உபசரிப்புகள் மற்றும் கொண்டாட்டங்கள் காரணமாக, இம்முறை வீட்டுக்கழிவுகளின் அளவு வழக்காத்தை விட 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் மூத்த செயல்பாட்டு மேலாளர் முகமட் இட்ரிஸ் முகமட் யூசோப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அதிகரித்த சுமையையும் சமாளித்து, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.








