கோலாலம்பூர், மார்ச் 25 - நாட்டின் பல முக்கிய விரைவுச் சாலைகளில் இன்று காலை முதல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விபத்துகள் மற்றும் வாகனப் பழுதுகளாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (LLM) தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் (PLUS) தெற்கு நோக்கிய திசையில் கிமீ 231.4-இல் ஏற்பட்ட விபத்து காரணமாக, சாங்காட் ஜெரிங்கில் இருந்து கோலா கங்சார் வரை சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன.
சம்பவ இடத்தைச் சீர் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், வலதுபுறப் பாதை இன்னும் சீரமைக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.
அதேபோல், பிளஸ் (E2) விரைவுச் சாலையின் தெற்கு நோக்கிய திசையில் கிமீ 22.8-இல் வாகனம் ஒன்று பழுதாகி நின்றதால், அவசர காலப் பாதை மற்றும் இடதுபுறப் பாதை பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் செடினாக் முதல் செனாய் உத்தாரா வரையிலான பயணத்தில் காலதாமதம் ஏற்படக்கூடும் என்றும், செத்தியா துரோபிக்கா முதல் டத்தோ ஓன் வரை போக்குவரத்து மந்தமாக இருப்பதாகவும் நெடுஞ்சாலை வாரியப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வுட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியில் (CIQ) இருந்து ஜோகூர் பாரு சுல்தான் இஸ்கந்தர் சுங்கச் சாவடி வரையிலான போக்குவரத்து நெரிசலாகக் காணப்படுகிறது.
இது தவிர, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச் சாலையில் (LDP), பூச்சோங் உத்தாமாவில் இருந்து பூச்சோங் இந்தான் வரையிலான பாதையிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காண முடிகிறது.
தற்போதைய போக்குவரத்து நிலவரங்கள் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள், 24 மணி நேரமும் இயங்கும் 1-800-88-7752 என்ற இலவச அழைப்பு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது எக்ஸ் (X) தளத்தில் @plustrafik மற்றும் @llmtrafik பக்கங்களைப் பின்தொடரலாம்.








