இஸ்லாமாபாத், மார்ச் 25 - மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் நடத்துவதற்குப் பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டு வீசப்படும் என்று விடுத்திருந்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் அனைத்து பேச்சுவார்த்தை முயற்சிகளையும் பாகிஸ்தான் முழுமையாக வரவேற்பதாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பிரதமர் ஷேபாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் சம்மதிக்கும் பட்சத்தில், அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கமான ஒரு சமரசத் தீர்வை எட்டுவதற்கு ஏதுவாக அந்தப் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தப் பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று கருத்துத் தெரிவித்திருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் நிலவும் விரோதப் போக்கை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஈரானுடன் மிகவும் ஆக்கபூர்வமான உரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறினார்.
அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த உரையாடல் நேற்றும் தொடர்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அமெரிக்காவின் இந்தக் கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கீர் கலிபாஃப் இது குறித்துப் பேசுகையில், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இத்தகைய செய்திகள் அனைத்தும் முற்றிலும் ஜோடிக்கப்பட்டவை என்றும் சாடியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தன.
இதற்குப் பதிலடியாக ஈரான் ஹோார்முஸ் நீரிணையை மூடியதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்தத் தூது முயற்சி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.







