இஸ்தான்புல், மார்ச் 24 – ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் கூட்டுத் தாக்குதல்களில் சிக்கி இதுவரை குறைந்தது 210 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 1,510 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் துயரச் செய்தியை அந்நாட்டின் சுகாதார அமைச்சர் முகமது-ரேசா ஜாபர்காந்தி ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியதாக 'அனடோலு அஜான்சி' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ஈரான் மீதான இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் உயிர்களுக்கு மட்டுமன்றி மருத்துவக் கட்டமைப்புகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 300 சுகாதார, மருத்துவ மற்றும் அவசரக்கால சிகிச்சை மையங்கள் இந்தத் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், காயமடைந்தவர்களை மீட்கப் பயன்படுத்தப்படும் 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டு இனி பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி கொமேனி உட்பட 1,300-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த இந்த அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
மருத்துவ வசதிகள் மற்றும் அவசரக்கால வாகனங்கள் மீதான தாக்குதல்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் பெரும் சவால்களை ஏற்படுத்தி வருவதாக ஈரான் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ந்து நீடித்து வரும் இந்தத் தாக்குதல்களால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.








