யங்கோன், மார்ச் 24 – நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மியான்மர் அரசாங்கம் அரசுத் துறை ஊழியர்களுக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்தே பணிபுரியும் (Work-from-home) நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மார்ச் 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த அதிரடி உத்தரவு, மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எரிபொருள் சேமிப்பு ஆகும்
இதன் காரணமாக, புதன்கிழமைகளில் வீட்டிலிருந்தே பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசுத் துறைகளைப் பின்பற்றி, தனியார் நிறுவனங்களும் வணிக அமைப்புகளும் தங்களால் இயன்றவரை இதே போன்ற வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் ஊக்கப்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மியான்மர் ஏற்கனவே வாகனங்களுக்கான ஒற்றை-இரட்டை இலக்கப் பதிவு எண் முறை மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை அமல்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கவும், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யவும் பல்வேறு வழித்தடங்கள் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்யும் பணிகளில் மியான்மர் அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.








