ஷா ஆலம், மார்ச் 18: சிலாங்கூர் மாநில அளவிலான தெலுங்கு புத்தாண்டு (உகாதி) கொண்டாட்டம் எதிர்வரும் மார்ச் 19-ஆம் தேதி, வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் ஷா ஆலம், கோத்தா கெமுனிங்கில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்விற்குச் சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் தலைமை தாங்கி சிறப்பிக்கவுள்ளார். மேலும், சிறப்பு விருந்தினராகக் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன், மலேசியா தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கடா பிரதாப் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
உகாதி பண்டிகை என்பது தெலுங்கு சமூகத்தின் கலாச்சார அடையாளத்தை வெளிப்படுத்துவதோடு, புதிய ஆண்டிற்கான நம்பிக்கையையும் கொண்டு வருவதாக அமைகிறது என பாப்பாராய்டு தனது முகநூலில் பதிவில் தெரிவித்தார்.
"சிலாங்கூர் மாநிலத்தின் பன்முகத்தன்மை மற்றும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவதில் இத்தகைய கலாச்சார விழாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உகாதி திருநாள் அனைத்து மக்களிடையே அமைதியையும் முன்னேற்றத்தையும் கொண்டு வர வேண்டும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சி விவரங்கள்:
நாள்: 19 மார்ச் 2026 (வியாழக்கிழமை)
நேரம்: இரவு 7.30 மணி
இடம்: ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கோத்தா கெமுனிங், ஷா ஆலம்
இந்தச் சிறப்புமிக்க கொண்டாட்டத்தில் சிலாங்கூர் வாழ் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்








