கோலா திரங்கானு: நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட 'ஓப்ஸ் பந்தாவ் 2026' நடவடிக்கையின் கீழ், திரங்கானு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) பல்வேறு விதிமீறல்கள் சம்பந்தப்பட்ட 39 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
பிப்ரவரி 19 முதல் ரமலான் சந்தைகள், பெருநாள் சந்தைகள், பொதுச் சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகள் உட்பட 2,451 வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் விளைவாக இந்த வழக்குகள் பதிவு செய்யப் பட்டதாக அதன் இயக்குனர் முகமது முஃப்சி லாட் தெரிவித்தார்.
"இந்த 39 வழக்குகளில் எடை அளவைகள் மற்றும் விலைக் குறியீடுகள் தொடர்பான குற்றங்களும் அடங்கும். ரமலான் மற்றும் பெருநாள் காலங்களில், மக்கள் வசதியாகவும், போதுமான உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
இங்குள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், 2026 ஆம் ஆண்டு ஹரி ராயா நோன்புப் பெருநாளுக்கான பண்டிகைக் கால அதிகபட்ச விலைத் திட்டத்தை (SHMMP) தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருட்களின் விநியோகம் மற்றும் விலை, மலிவு விற்பனை, எடைக் கருவிகளின் பயன்பாடு, போலிப் பொருட்கள் விற்பனை, ஹலால் சட்ட விதிகளைப் பின்பற்றுதல் மற்றும் பண்டிகைக் கால தேவைகளுக்கான பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல அம்சங்களில் இந்தச் சோதனைகள் கவனம் செலுத்துவதாகவும் முகமது முஃப்சி கூறினார்.
இதற்கிடையில், பாதுகாப்பான மற்றும் நெறிமுறை மிக்க வணிகச் சூழலை உருவாக்குவதற்காக, பயனீட்டாளர்கள் அதிகம் கூடும் இடங்களில் 118 அமலாக்க அதிகாரிகளின் இருப்பை அமைச்சு அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், களத்தில் விலைக் கண்காணிப்பைச் செயல்படுத்த உதவும் வகையில், திரங்கானு KPDN-ஐச் சேர்ந்த 58 விலைக் கண்காணிப்பு அதிகாரிகளும் (PPH) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட 'பிஸ்-பெர்காட்' (Biz-BERKAT) எனும் நெறிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்கி வணிகம் செய்யும் நடைமுறையை ஊக்குவிக்கும் முயற்சியாக, அனைத்து வர்த்தகர்களும் அரசாங்கம் நிர்ணயித்த சட்டங்களுக்கு, குறிப்பாக இந்த ரமலான் மற்றும் பெருநாள் காலங்களில் இணங்குமாறு திரங்கானு KPDN நினைவூட்டுகிறது," என்றார் அவர்.
திரங்கானு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சோதனையில் (KPDN) பல்வேறு விதிமீறல்கள் சம்பந்தப்பட்ட 39 வழக்குகளை பதிவு செய்துள்ளது
17 மார்ச் 2026, 8:15 AM
தொடர்புடைய செய்திகள்
national
10 நாள் 'ஓப்ஸ் பந்தாவ்': 1.09 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல், 295 வழக்குகள் பதிவு
Evelyn Moses
2 மார்ச் 2026

selangor
பந்திங், தெலுக் பங்லிமா காராங் பகுதிகளில் லெமாங், வாணவேடிக்கை விற்பனையை எம்பிகேஎல் கண்காணிப்பு
Pakiya
12 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் ரஹ்மா மலிவு விற்பனை திட்டத்திற்கு தற்காலிக விடுமுறை
Shalini Rajamogun
20 மார்ச் 2026

selangor
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சக அதிகாரிகள் 790 போலி கைக் கடிகாரங்களை பறிமுதல் செய்து, ஆடவரை கைது செய்தனர்
Pakiya
18 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?


