கோலாலம்பூர், மார்ச் 25 - மலேசியக் காவல்துறையின் (PDRM) 219-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் முன்னாள் காவல்துறை வீரர்களுக்கும் மாட்சிமை தங்கிய மலேசியப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மலேசியக் காவல்துறையின் கௌரவ ஆணையர் தலைவருமான (Honorary Commissioner-in-Chief) மாட்சிமை தங்கிய பேரரசர், நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் நலனையும் காப்பதில் காவல்துறையினர் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவையைப் பாராட்டியுள்ளார்.
இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பேரரசர், நேரம் மற்றும் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது, எப்போதும் கடமைக்குத் தயாராக இருக்கும் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு உணர்வை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பண்டிகைக் காலங்களிலும் அவசர நிலைகளிலும் அவர்கள் காட்டும் உறுதிப்பாடு, நாட்டின் பாதுகாப்புத் தூண்களில் ஒன்றாகத் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
"பணியின் போதும் அனைத்துக் காவல்துறை உறுப்பினர்களையும் எல்லாம் வல்ல இறைவன் பாதுகாப்பானாக," என்று வாழ்த்திய பேரரசர், பணியின் போது மறைந்த காவல்துறை வீரர்களுக்காக அஞ்சலியைச் செலுத்தினார்.
அவர்களின் தியாகங்கள் மதிக்கப்படுவதோடு, அவர்களின் ஆன்மாக்கள் இறைவனடி சேரவும் அவர் பிரார்த்தனை செய்துள்ளார். அமைதியான மற்றும் பாதுகாப்பான மலேசியாவை உருவாக்குவதில் காவல்துறையினரின் பங்கு ஈடு இணையற்றது என்பதை இப்பதிவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.








