அலோர் காஜா: மஸ்ஜித் தானா, ஜாலான் பாடாங் கெமுந்திங் பகுதியில் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.அதிகாலை மணி 2.20 அளவில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில், யமஹா ஆர்எக் ஸெட் (Yamaha RXZ) ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 26 வயதான அவர், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் வலது கை துண்டிக்கப் பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், சுங்கை ஊடாங்கிலிருந்து பெங்காலான் பாலாக் நோக்கிச் சென்று கொண்டிருந்த பாதிக்கப் பட்டவர், ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைக்குள் நுழைந்ததாக நம்பப் படுகிறது என்று மலாக்கா போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர், சுப்பிரெண்டென் முஹம்மது ஜாக்கி ரமாட் கூறினார்.
"அதன் விளைவாக, பெங்காலான் பாலக்கிலிருந்து சுங்கை ஊடாங் நோக்கி வந்துகொண்டிருந்த எஸ்ஒய்எம் விஎஃப்3ஐ (SYM VF3i) ரக மோட்டார்சைக்கிள் மற்றும் புரோட்டோன் சாகா கார் மீது பாதிக்கப்பட்டவர் மோதினார்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில், எஸ்ஒய்எம் விஎஃப்3ஐ மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 18 வயது இளைஞரின் கால் மற்றும் வலது கையில் முறிவு ஏற்பட்டு, தற்போது மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புரோட்டோன் சாகா காரை ஓட்டி வந்த 29 வயது பெண்மணிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
"உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனை- க்காக அலோர்காஜா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், போக்குவரத்துப் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் லோ கியா சாவ் அவர்களை 019-5382353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)இன் கீழ் நடைபெறும் விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.




