ஷா ஆலம், மார்ச் 22: நோன்பு மாதமான ரமலான் காலத்தில் தீ விபத்துகளின் எண்ணிக்கை 106 இலிருந்து 172 ஆக அதிகரித்துள்ளது. இதில் பட்டாசுகள் மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக ஏற்பட்ட தீ சம்பவங்களும் அடங்கும் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) இயக்குநர் டத்தோ வான் ம்ட் ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், பெரும்பாலான சம்பவங்கள் திறந்தவெளி எரிப்பு அல்லது கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளாகும்.“சாதாரண மாதங்களுடன் ஒப்பிடுகையில், ரமலான் முழுவதும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. வெப்பமான வானிலை காரணமாக காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டன.
கடந்த ஆண்டின் ரமலான் நடுப்பகுதியில் கோல லாங்காட் காடு பாதுகாப்புப் பகுதியில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.“விசாரணையில், சில கட்டிட தீ விபத்துகள் பட்டாசுகளால் ஏற்பட்டவை என்று தெரியவந்தது. இருப்பினும், அவை உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, சிலாங்கூர் JBPM எட்டு புதிய Fire Rescue Tender (FRT) வாகனங்களை பயன் படுத்தத் தயாராக உள்ளது என்று வான் ரஸாலி கூறினார்.
“பண்டிகை காலத்தில் 38 நிலையங்களில் இருந்து 80 சதவீத பணியாளர்கள் பணியில் இருப்பதால், நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம். இந்த எட்டு புதிய வாகனங்கள், குறிப்பாக விபத்து மீட்பு நடவடிக்கைகளில் தயார் நிலையை அதிகரிக்க உதவும்,” என்றார்.
முன்னதாக, ஹரிராயா ஐதில்பித்ரி காலத்தில், சிலாங்கூரில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்களில் 20 சதவீதத்திற்கே விடுப்பு வழங்கப்பட்டதாகவும், மற்றவர்கள் அனைவரும் பணியில் இருந்து அவசரநிலைகளுக்கு தயாராக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மாறி மாறி விடுப்பு பெற அனுமதிக்கப்படுவார்கள், இதனால் அவசர சேவைகள் இடையூறு இல்லாமல் செயல்படும் என்று அவர் கூறினார்.அவர் மேலும் கூறுகையில், ஐடில்பித்ரி காலத்தில் அவசர நிலைகள் ஏற்பட்டால், மாநிலத்தின் 38 தீயணைப்பு நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும்.




