ஜெருசலேம், மார்ச் 21 — டொனால்ட் டிரம்பின் அமைதி வாரியம் ஹமாஸுக்கு அதன் ஆயுதங்களை எப்படிக் கீழே போடலாம் என்பது குறித்த எழுத்துப்பூர்வ திட்டத்தை முன் வைத்துள்ளது என்று இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது அமெரிக்க அதிபர் காசாவின் எதிர்காலத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், பாலஸ்தீனிய போராளிகள் இதுவரை மறுத்து வரும் ஒரு நடவடிக்கையாகும்.
என்.பி.ஆர். முதலில் செய்தி வெளியிட்ட இந்தத் திட்டம், கடந்த வாரம் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஹமாஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. இந்தப் பேச்சுகளில் நிக்கோலாய் மிளாடெனோவ் மற்றும் அர்யே லைட்ஸ்டோன் ஆகியோர் கலந்து கொண்டதாக விவகாரத்தை அறிந்த அவை இரண்டும் தெரிவித்தன.
மிளாடெனோவ் டிரம்ப் நியமித்த அமைதி வாரியத்தின் காசா தூதர் ஆவார். லைட்ஸ்டோன் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்-க்கு உதவியாளராக உள்ளார். டிரம்பின் காசா திட்டத்தின்படி, இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து வெளியேற வேண்டும். ஹமாஸ் தன் ஆயுதங்களை கீழே போடும் போது புனரமைப்புப் பணிகள் தொடங்க வேண்டும்.
இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் கடந்த அக்டோபரில் ஒப்புதல் அளித்துள்ளன. வியாழக்கிழமை மிளாடெனோவ் தெரிவித்தார்: போரால் புண்பட்ட காசாவுக்கு நிவாரணம் அளிக்கும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்தியஸ்தர்கள் ஒப்புக்கொண்ட ஒரு கட்டமைப்பு, பெரும்பாலும் இடிபாடுகளாக கிடக்கும் இந்தப் பகுதியில் புனரமைப்பை முன்னெடுக்க உதவும்.
“இப்போது இது மேசையில் உள்ளது. இது ஒரு தெளிவான தேர்வை வலியுறுத்துகிறது — ஹமாஸும் ஒவ்வொரு ஆயுதக் குழுவும் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். என்பதில் எந்த விதிவிலக்கும் இல்லை, எந்தப் பிரிவுக்கும் விலக்கு இல்லை. இந்த நம்பிக்கை காலத்தில், பாலஸ்தீன மக்களுக்கான சரியான தேர்வை எடுக்க பொறுப்புள்ளவர்கள் முன்வர வேண்டும்,” என்று அவர் ஈத் அல்-ஃபித்ர் பண்டிகையையொட்டி எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டார்.
சனிக்கிழமை, பண்டிகை விடுமுறையின் இரண்டாவது நாளில் ஹமாஸ் பிரதிநிதிகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
ஆயுதக் களைவு பேச்சுகள், பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.
அம்னெஸ்டி வழங்கப்படலாம்
அமெரிக்க அதிகாரிகள், ஈரான் ஆதரவு ஹமாஸ் உறுப்பினர்கள் கனரக ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட லேசான ஆயுதங்களை கீழே போட ஒப்புக் கொண்டால், அவர்களுக்கு அம்னெஸ்டி (மன்னிப்பு) வழங்கப் படலாம் என தெரிவித்தனர்.
இருப்பினும் ஹமாஸுக்கு நெருக்கமான வட்டாரங்கள், காசாவில் உள்ள போட்டி ஆயுதக் குழுக்களின் தாக்குதலுக்கு இடையே உள்ள கடுமையான பகைமை காரணமான, பயத்தினால் ஹமாஸ் தன் துப்பாக்கிகளை ஒப்படைக்க மறுக்கும் என்கிறார்கள்.
ஒரு வட்டாரம், இஸ்ரேல் முழுமையான ஆயுதக் களைவை வலியுறுத்துவதால், இஸ்ரேலுக்கு ஏற்றதாக இருப்பதைப் பொறுத்தே பெரும்பாலான விஷயங்கள் அமையும் என தெரிவித்தது. கடந்த சில மாதங்களாக ஹமாஸின் முக்கிய அதிகாரிகள் சிலர் ஆயுதக் களைவை முற்றிலும் நிராகரித்துள்ளனர்.
காசாவின் சுமார் பாதி பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேல் படைகள் வெளியேறும் எந்த அறிகுறியையும் இஸ்ரேல் இன்னும் காட்ட வில்லை. மற்றொரு பாதியை ஹமாஸ் உறுதியாகப் பிடித்துள்ளது. இரண்டு ஆண்டுகால அழிவுகரமான போரால் இரண்டு மில்லியன் மக்கள் பெரும்பாலும் வீடில்லாமல் தவிக்கின்றனர்.
அம்னெஸ்டியும் காசாவில் இலக்கு வைத்த முதலீடுகளும் ஹமாஸுக்கு ஊக்கமாக வழங்கப் படுகின்றன. ஆனால் அமைதி வாரியத்திடம் இதற்கான நிதி இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஒரு வட்டாரம் தெரிவித்தது.
டிரம்ப் பிப்ரவரியில் வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளிடமிருந்து சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் (RM27.58 பில்லியன்) நன்கொடை உறுதி மொழிகளைப் பெற்றார். ஆனால் அதே நாடுகள் விரிவடைந்த மத்திய கிழக்குப் போரில் ஈரானால் தாக்குதலுக்கு உள்ளாகின.
அந்த உறுதிமொழி நிதியில் மிகச் சிறிய தொகை மட்டுமே உண்மையில் வழங்கப் பட்டுள்ளது என்று அவ்வட்டாரம் தெரிவித்தது ஆனால் அது தொகையை குறிப்பிடவில்லை.





