புக்கிட் மெர்தாஜாம், 20 மார்ச்: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, மலேசிய மக்கள் ஐடில்ஃபித்ரியை எளிமையாக-வும், கவனமாகவும் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கொண்டாட்டம் நாட்டின் இஸ்லாமிய சமூகத்தின் முக்கியமான பாரம்பரியம் என்றாலும், மக்கள் விரயத்தைத் தவிர்த்து அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.“நாம் ஐடில்ஃபித்ரியைக் கொண்டாட விரும்புகிறோம். ஆனால் நான் அனைவரையும் எளிமையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறேன். வழக்கமாக ஏழு வகை குய்ஹ் (மிட்டாய்) தயாரித்தால், அதை நான்காகக் குறைக்கலாம்.
அதேபோல் கெத்துப்பாத் (ketupat) தயாரிப்பிலும் அதிகப்படியாகச் செய்ய வேண்டாம்.“நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து, கொஞ்சம் சேமித்து வைக்க வேண்டும்.
இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்,” என்று அவர் இன்று பெர்மாத்தாங் பாசிர் பொது மண்டபத்தில் நடைபெற்ற ‘ ரமாதான் பெர்சாமா பிம்பினான் கம்யூனிட்டி பெர்மாத்தாங் பாவ்’ நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
உலகளாவிய சூழ்நிலை, குறிப்பாக சர்வதேச மோதல்கள், பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிப்பதாகவும், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிப்பதாகவும் அவர் கூறினார்.“நடைபெறும் போரைப் பாருங்கள். அது எண்ணெய் மற்றும் எரிவாயு விலையைப் பாதிக்கிறது.
நல்ல மேலாண்மை காரணமாக நாம் இன்னும் தாக்குப்பிடிக்க முடிகிறது. ஆனால் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, செலவுகளை கவனமாகச் செய்ய வேண்டும்,” என்றார்.
நிதியமைச்சருமான அன்வார், உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறு காரணமாகப் பொருட்களின் விலை உயரும் நிலையில், வீட்டு நிதி ஸ்திரத்தன்மைக்கு சிக்கனம் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார். பினாங்கில் இன்று மேற்கொள்ளப்பட்ட குறுகிய பணி விஜயத்தின்போது, ரமலான் மாதம் தன்னடக்கம் மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் பயிற்சிக் களமாக இருக்க வேண்டும் என்றும், அதில் செலவுக் கட்டுப்பாடு அடங்கும் என்றும் அவர் நினைவூட்டினார்.மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ஐடில்ஃபித்ரியை கொண்டாடுகின்றனர்.





