ஈப்போ: தெலுக் இந்தான், ஜாலான் பாசிர் பெர்டாமார் என்ற இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், டெலிகாம் மலேசியாவுக்குச் சொந்தமான கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் ஆடவர்கள் இருவர் கைது செய்யப் பட்டனர்.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சுமார் 5.3 கிலோகிராம் எடையுள்ள செப்புக் கேபிள் சுருள்கள் அடங்கிய வெள்ளைப் பை ஒன்று பறிமுதல் செய்யப் பட்டதாக ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறை இன்று இரவு முகநூல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக் கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் இருவருக்கும் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பழைய குற்றப் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
"இவ்வழக்கு திருட்டுக் குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 379-வது பிரிவின் கீழ் விசாரிக்கப் படுகிறது. தெலுக் இந்தான் வட்டாரத்தில் நிகழ்ந்த மற்ற கேபிள் திருட்டுச் சம்பவங்களில் சந்தேக நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதை அடையாளம் காண காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
"விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காகவும், குற்றச் சாட்டுக்களைப் பதிவு செய்யவும் துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும்," என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
எனவே, சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக குற்றச் செயல்களைத் தடுக்கும் அதிகாரிகளின் முயற்சிக்கு உதவும் வகையில், எந்தவொரு குற்றச் செயல் தொடர்பான தகவல்களையும் பொதுமக்கள் தொடர்ந்து வழங்குமாறு காவல்துறை அறிவுறுத்துகிறது.
தெலுக் இந்தானில் கேபிள் திருடியதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது
19 மார்ச் 2026, 3:14 AM
உங்கள் கருத்து என்ன?




