கோலாலம்பூர், மார்ச் 18 : எதிர்வரும் ஹரிராயா ஐடில்பித்ரி பெருநாளை முன்னிட்டு, மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான பயணச் செலவைக் குறைக்கும் வகையில், நெடுஞ்சாலைகளில் 50 சதவீத டோல் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு மத்தியில், மக்களுக்கு உதவும் நோக்கில் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சலுகையானது மார்ச் 18, 2026 (புதன்கிழமை) அதிகாலை 12.01 மணி முதல் மார்ச் 19 (வியாழக்கிழமை) இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும்.
மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புப் பாதையின் (LINKEDUA) சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம் மற்றும் தஞ்சோங் குப்பாங் டோல் சாவடிகளைத் தவிர, அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள முதல் வகுப்பு (Class 1) ரகத் தனியார் வாகனங்களுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தும்.
இதற்காக அரசாங்கம் சுமார் 21.03 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளது.








