ஷா ஆலம், மார்ச் 18 : எதிர்வரும் ஹரிராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு, பத்து தீகா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மொத்தம் 1,050 குடியிருப்பாளர்களுக்குத் தலா 200 ரிங்கிட் மதிப்புள்ள 'ஜோம் ஷோப்பிங்' வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் 40 முதல் 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் பயனடைந்துள்ளதாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டானியல் அல்-ரஷித் ஹாரூன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இதே திட்டத்தின் கீழ் 850 பேர் மட்டுமே பயனடைந்த நிலையில், இவ்வாண்டில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மாநில அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்குத் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்ட டானியல் அல்-ரஷித், "இந்த நிதியுதவி பெருநாள் முன்னேற்பாடுகளைச் செய்யும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என்று நம்புகிறேன்," என மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.
அதே வேளையில், கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அதே தொகுதியைச் சேர்ந்த 188 மாணவர்களுக்கு 'மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்' திட்டத்தின் கீழ் தலா 100 ரிங்கிட் ரொக்க உதவி வழங்கப்பட்டது.
எம்பிஐ வழங்கிய இந்த நிதியுதவி, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கான பள்ளி உபகரணங்களை வாங்குவதற்குப் பெரிதும் துணையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். பத்து தீகா பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு இத்தகைய திட்டங்கள் மூலம் நன்மைகள் கிடைப்பதோடு, மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து முன்னேற இது ஒரு ஊக்கமாக அமையும் என்றும் அவர் மேலும் கூறினார்.








