ஓப்ஸ் செலாமாட் ஐடில்பித்ரி: விபத்து அபாயமுள்ள 59 இடங்களை காவல்துறையினர் கண்காணிப்பு

18 மார்ச் 2026, 3:16 AM
ஓப்ஸ் செலாமாட் ஐடில்பித்ரி: விபத்து அபாயமுள்ள 59 இடங்களை காவல்துறையினர் கண்காணிப்பு

கோலாலம்பூர், மார்ச் 18: ஹரி ராயா ஐடில்ஃபிட்ரியை முன்னிட்டு நடத்தப்படும் ஓப்ஸ் செலாமாட் நடவடிக்கையின் போது, நாடு தழுவிய அளவில் அடிக்கடி விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட 59 பகுதிகளில் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) தனது கண்காணிப்பை மையப்படுத்தும்.

புக்கிட் அமான் ஜே.எஸ்.பி.டி.யின் இயக்குநர், டத்தோஶ்ரீ முகமட் ஹஸ்புல்லா அலி கூறுகையில், 26-வது முறையாக நடத்தப்படும் இந்த நடவடிக்கை, மார்ச் 19 முதல் 24 வரை ஆறு நாட்களுக்கு நடைபெறும் என்றார். சாலை விபத்துக்களை, குறிப்பாக மரண விபத்துக்களைக் குறைப்பது, சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வது மற்றும் குற்றங்களைத் தடுப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

"இந்தக் கால கட்டத்தில் சுமார் 23 லட்சம் வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது."

"இந்த நடவடிக்கை, ஆரம்பகாலத் தடுப்பு மற்றும் முழுமையான அமலாக்கக் கொள்கைகளைப் பின்பற்றும். இதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுடனும் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் பிற அமலாக்க நிறுவனங்களுடனான ஒத்துழைப்பும் அடங்கும்," என்று அவர் இன்று இங்கு இந்த நடவடிக்கையைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை முழுவதும், அமலாக்கத்தை வலுப்படுத்தவும், சாலைப் பயனர்களுக்கு உதவவும் மொத்தம் 5,544 ஜே.எஸ்.பி.டி. அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்று அவர் கூறினார்.

"அவசரகாலப் பதிலளிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை வழித்தடங்கள் உட்பட முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள 11 முக்கிய இடங்களில் 25 அவசரப் பதிலளிப்புக் குழுக்கள் நிறுத்தப்படும்."

"வாகனப் பழுது அல்லது பிற அவசரநிலைகளை எதிர்கொள்ளும் சாலைப் பயனர்களுக்கு இந்த குழுக்கள் உடனடியாக உதவி வழங்கத் தயாராக இருக்கும்," என்றார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ், வேக வரம்பை மீறுதல், வாகனம் ஓட்டும்போது கைப் பேசியைப் பயன்படுத்துதல், அவசர வழியைப் பயன்படுத்துதல், சிகப்பு விளக்கை மதிக்காமல் செல்லுதல், இரட்டைக் கோடுகளைத் தாண்டி முந்திச் செல்லுதல் மற்றும் வரிசையை மீறிச் செல்லுதல் ஆகிய ஆறு முக்கிய குற்றங்களுக்கு எதிராகப் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மற்றொரு வளர்ச்சியில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், போக்குவரத்து அமைச்சகம் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மூலம் மார்ச் 19 மற்றும் 20 ஆம் தேதிகளிலும், மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளிலும் கனரக வாகனங்களின் இயக்கத்திற்குத் தடை விதித்துள்ளது என்றார்.

பொதுமக்களுக்குப் போக்குவரத்துத் தகவல்களை வழங்குவதில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Perkeso) மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) போன்ற உத்திப்பூர்வ பங்காளிகளுடன் ஜே.எஸ்.பி.டி. ஒத்துழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுதல், சமீபத்திய போக்குவரத்துத் தகவல்களைப் பெறுதல் மற்றும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்தல் போன்ற ஆலோசனைகளுடன், சாலை விதிகளைக் கடைப் பிடிக்கவும், மது அல்லது போதைப் பொருள் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும், சாலையில் பொறுமையாகவும் ஒழுக்கமாகவும் இருக்குமாறும் அவர் நினைவூட்டினார்.

"பண்டிகைக் காலங்களில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், குற்றங்களைத் தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பயனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619