ஷா ஆலம், மார்ச் 16: பண்டான் இண்டா பகுதியில் உள்ள பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் வியாபாரப் பொருட்களை விட்டுச் சென்ற சிறு வியாபாரிகளுக்கு எதிராக அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நேற்று காலை பண்டான் இண்டா 1/25 சாலை மற்றும் அங்குள்ள ஷெல் (Shell) எரிபொருள் நிலையத்திற்கு அருகிலுள்ள தற்காலிக வியாபாரத் தளங்களில் இந்தப் பறிமுதல் மற்றும் இடமாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
எம்பிஏஜே அமலாக்கத் துறையினரால் காலை 9.21 மணியளவில் தொடங்கப்பட்ட இந்தச் சோதனையானது, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
இது குறித்து நகராண்மை கழகம் வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையில், சில வியாபாரிகள் தங்களது வியாபார உபகரணங்களையும் பொருட்களையும் பொது இடங்களில் அப்படியே விட்டுச் செல்வதால், அப்பகுதியின் தூய்மை பாதிக்கப்படுவதோடு பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் இடையூறு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது.
இதன் விளைவாகவே, அந்த இடங்களைச் சுத்தப்படுத்தவும் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள் முறையாகவும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி அந்த இடங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என நகராண்மை கழகம் கருதுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை வியாபாரிகள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய, இனிவருங்காலங்களிலும் இத்தகைய திடீர் சோதனைகளும் கண்காணிப்புகளும் தொடரும் என்று எம்பிஏஜே எச்சரித்துள்ளது.








