கிள்ளான் மார்ச் 13, பண்டமாரான், ஜாலான் பந்திங் பகுதியில் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற 31 வயது உள்ளூர் ஆடவர், ரோந்து போலீஸ் வாகனம் மீது மோதிய சம்பவத்தில் நேற்று வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்.
கிள்ளான் தெற்கு மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் லிம் ஜிட் ஹியூ கூறுகையில், இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார். ரோந்துப் பணியில் இருந்த போலீசார் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றைக் கண்டபோது, அதன் ஓட்டுநரை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
இருப்பினும், அந்த சந்தேக நபர் போலீசாரின் உத்தரவை மீறி தப்பிச் செல்ல முயன்றதால், போலீஸ் வாகனம் அவரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றது.
"அதே சாலையில் உள்ள கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையத்திற்கு அருகிலுள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்பு வரை சந்தேக நபர் தப்பி ஓடினார்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
தப்பிக்க முயன்றபோது, சந்தேக நபர் போலீஸ் ரோந்து வாகனத்தின் இடது பக்கத்தில் மோதியதாகவும், அதன் பிறகே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே சம்பவத்தில், சந்தேக நபர் டோயோட்டா வயோஸ் ரகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு கார்கள் மீதும் மோதியதில், அவ்வாகனங்களின் வலதுபுற பம்பர்கள் சேதமடைந்தன.
"விசாரணையில், சந்தேக நபருக்கு ஐந்து குற்றவியல் பதிவுகளும், நான்கு போதைப் பொருள் தொடர்பான பதிவுகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் இரண்டு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது," என்றார்.
சந்தேக நபரின் வாகனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருள் என நம்பப்படும் இரண்டு சிறிய பொட்டலங்கள் கண்டெடுக்கப் பட்டதாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொது ஊழியரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக தண்டனைச் சட்டம் பிரிவு 186 மற்றும் 279-இன் கீழும், போதைப்பொருள் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 44(1)(a)-இன் கீழும் மூன்று விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் வைத்திருந்தது மற்றும் உட்கொண்டதற்காக அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 12(2) மற்றும் 15(1)(a)-இன் கீழும் விசாரணை நடத்தப் படுகிறது.
"சந்தேக நபருக்கான தடுப்புக் காவல் ஆணை இன்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெறப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லலாம் அல்லது 03-33762222 என்ற எண்ணில் கிள்ளான் தெற்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தை (IPD) தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவலாம்.
ரோந்து போலீஸ் வாகனம் மீது மோதிய ஆடவர் கைது
14 மார்ச் 2026, 6:57 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
இரு போதைப்பொருள் கும்பல்கள் முறியடிப்பு; RM 14.6 மில்லியன் மதிப்புள்ள ஷாபு, கஞ்சா பறிமுதல்
Pakiya
11 மார்ச் 2026

national
போதைப்பொருள் சோதனை நடவடிக்கையில் மூன்று ஆடவர்கள் கைது
Shalini Rajamogun
2 ஜனவரி 2026

national
கிள்ளான் பள்ளத்தாக்கில் மின்னியல் சிகரெட் விநியோக மோசடி கும்பல் முறியடிப்பு
Kathiravan Manoharan
29 ஆகஸ்ட் 2025

national
முன்னாள் முக்கியத் தலைவரின் மகன் போதைப் பொருள் வழக்கில் கைது
Rajah Ramaya
25 ஆகஸ்ட் 2025

உங்கள் கருத்து என்ன?




