கோலாலம்பூர் மார்ச் 13: அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி தொடர்பான விசாரணையில் தேடப்பட்டு வரும் முக்கிய சாட்சிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) வழியாக அவர்கள் வெளிநாடு சென்றதை குடிநுழைவுத் துறை பதிவுகள் உறுதிப் படுத்தியுள்ளன. இதனிடையே, மலேசியாவில் உள்ள 14 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் நிலைத்தன்மையையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் முயற்சி என்ற கோணத்தில் இந்த வழக்கு விசாரிக்கப் படுகிறது. எனவே, இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற ஊகங்களில் ஈடுபட வேண்டாம் என டத்தோ குமார் கேட்டுக் கொண்டார்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தைச் (UIA) சேர்ந்த டாக்டர் சியாசா சுக்ரி, ஊழல் எதிர்ப்பு மையத்தின் (C4) தலைமை நிர்வாகி புஷ்பன் முருகையா, முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் மனைவிக்குரிய வழக்கறிஞர் நிசாமுடின் ஹமீட் ஆகிய மூவர் இவ்வாரம் புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்தனர்.
விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட மின்னஞ்சல் ஒன்றில் புஷ்பனின் பெயர் இருந்ததால், அவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிகிறது.






