ஷா ஆலம், மார்ச் 13: நாட்டின் 16-ஆவது பொதுத்தேர்தல் (PRU16) நடைபெறவுள்ள முக்கியத் தேதிகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என மலேசிய தேர்தல் ஆணையம் (SPR) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களைக் குழப்பும் வகையில் பரப்பப்படும் இத்தகைய போலித் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்பதோடு அதனைப் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, முறையான ஆதாரங்கள் இல்லாத, திசைதிருப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
"தவறான பின்னணியைக் கொண்ட செய்திகள், தெளிவற்ற ஆதாரங்கள் மற்றும் போலியாக உருவாக்கப்பட்ட படங்கள் அல்லது தகவல்களைப் பரப்புவதைத் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்," என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் வழியாக மட்டுமே முறையாக அறிவிக்கப்படும்.
எனவே, உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வத் தகவல்களுக்காகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








