புத்ராஜெயா, மார்ச் 11- இந்த ஆண்டு ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 18-ஆம் தேதி ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு (KPM) அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பண்டிகைக்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்ய இந்த கூடுதல் விடுமுறை வாய்ப்பளிக்கும் என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"கல்விச் சமூகத்தினரின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அமைச்சின் அர்ப்பணிப்புக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வு நாட்காட்டியின்படி, கெடா, கிளாந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய 'பிரிவு ஏ' பள்ளிகளுக்கு மார்ச் 19-ஆம் தேதி ஒரு நாள் கூடுதல் விடுமுறை ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
'பிரிவு பி' பள்ளிகளான மலாக்கா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேசங்களான கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகியவற்றுக்கு மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.








