சுங்கை பட்டாணி, மார்ச் 10-சக ராணுவ வீரர்கள் இருவரைத் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சுங்கை பட்டாணிக்கு அருகிலுள்ள ஒரு ராணுவ முகாமில் பணிபுரியும் இரண்டு கோப்ரல்கள், விசாரணைக்கு உதவுவதற்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தண்டனைச் சட்டம் பிரிவு 324-இன் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள, இருவரும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை, இரவு 10 மணியளவில் சம்பந்தப்பட்ட முகாமின் தங்குமிடப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் 25 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலில், 21 மற்றும் 24 வயதுடைய இரண்டு வீரர்களின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பான புகார் கிடைத்ததை கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் உறுதிப்படுத்தினார்.
"இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. விசாரணைக்கு உதவுவதற்காகச் சந்தேக நபர்கள் இன்று காலை ரிமாண்ட் செய்யப்பட்டனர்," என்று அவர் கூறினார்.




