கோலாலம்பூர், மார்ச் 10- இந்து மதச் சின்னமான திரிசூலத்தை வேண்டுமென்றே மிதித்து அவமதிக்கும் காணொளியை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தமீம் தஹ்ரி என்பவரின் பொறுப்பற்ற செயலுக்குப் பல்வேறு தரப்பினர் தங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் இவரின் இத்தகைய செயல், நாட்டின் பல்லினச் சமூகங்களிடையே வெறுப்புணர்வையும் மத ரீதியான பதற்றத்தையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சியின் தலைமை மன்றத்தின் துணைத் தலைவர் ராஜன் முனுசாமி கூறினார்.
மலேசியாவின் முதுகெலும்பாக விளங்கும் மத நல்லிணக்கம் மற்றும் 'ருக்குன் நெகாரா' கோட்பாடுகளுக்கு எதிரான இந்தச் செயல், கூட்டரசு அரசியலமைப்பின் 11-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது என்று அவர் கருத்துரைத்தார்.
கருத்துச் சுதந்திரம் என்பது பிற மதங்களைப் புண்படுத்துவதற்கோ அல்லது மதத் துவேஷத்தைத் தூண்டுவதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
எனவே, இந்த விவகாரத்தில் அரச மலேசிய போலீஸ் படையும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் துரிதமான மற்றும் நேர்மையான விசாரணையை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் அனைவரும் அமைதியைக் கடைப்பிடிப்பதோடு, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்க முன்வர வேண்டும் என முன்னாள் காஜாங் நகராண்மை கழகத்தின் முன்னாள் உறுப்பினருமான அவர் கேட்டுக்கொண்டார்.




