கோலாலம்பூர், மார்ச் 5 - வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள 'கார்ப்பரேட் மாஃபியா' மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் புகார்களை விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையத்தை (RCI) அமைக்க வேண்டும் என DAP பொதுச்செயலாளர் அந்தோணி லோக் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவது SPRM நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் காப்பதற்கும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும் அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாதது குறித்து DAP தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
சீர்திருத்தச் செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு வக்கீல் பணிகளைப் பிரிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதை DAP முழுமையாக ஆதரிக்கிறது.
நிறுவனச் சீர்திருத்தங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் சமரசம் இன்றி செயல்பட DAP தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக அந்தோணி லோக் மீண்டும் வலியுறுத்தினார்.




