தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இலவசக் கல்வி திட்டத்தை விரிவுபடுத்த முயற்சி

3 மார்ச் 2026, 7:55 AM
தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இலவசக் கல்வி திட்டத்தை விரிவுபடுத்த முயற்சி

கோலாலம்பூர், மார்ச் 3 - தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் (IPTS) பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கும், தேசிய உயர் கல்வி நிதி வாரியத்தின் (PTPTN) இலவசக் கல்வி திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியை உயர் கல்வி அமைச்சு (KPT) பரிசீலித்து வருகிறது.

மாநில அரசுக்குச் சொந்தமான பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் 'இ-காசிஹ்
கல்வி உதவித்தொகை' பெறுவதை உறுதி செய்வதற்காக, இந்த விவகாரம் அமைச்சு மட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக உயர் கல்வி துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹலிம் கூறினார்.

"மாநில அரசுக்குச் சொந்தமான பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் உயர் வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற உண்மையை நாங்கள் புறக்கணிக்க முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் ஒரு வழியைக் கண்டறிய முயற்சிப்போம். எங்களின் நிதி நிலையை நாங்கள் சரிபார்க்க வேண்டும், இந்த முறை செலவு அதிகம், ஆனால் எதிர்காலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள தகுதியான மாணவர்களுக்கும் இந்த முயற்சியை விரிவுபடுத்த எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்," என்று டேவான் நெகாராவில் நடந்த கேள்வி பதில் அமர்வின்போது தெரிவித்தார்.

மாநில அரசுக்குச் சொந்தமான தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கும் இந்த உதவியை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்று செனட்டர் டத்தோ பேராசிரியர் எமரிட்டஸ் டாக்டர் முகமது ரெட்சுவான் ஒத்மான் எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு
பதிலளித்தார்.

"இந்த முயற்சி உண்மையாகவே இலக்குக் குழுவைச் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்வோம், குறிப்பாக தகுதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்," என்று ஆடம் அட்லி
மேலும் கூறினார்.

ஆவணங்களைச் சரிபார்க்கும் செயல்முறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
நிதியுதவிக்கான நிபந்தனைகளை மீறும் அல்லது போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் எந்தவொரு மாணவரின் உதவியும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619