கோலாலம்பூர், ஜூலை 21 - கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட காடு மற்றும் புதர்களில் தீ விபத்திற்கு மனித நடவடிக்கைகளே காரணம் என்று நம்பப்படுகிறது.
மேலும், தற்போதைய வானிலை இயற்கையாகவே தீ விபத்துகளை ஏற்படுத்தும் அளவிற்கு வெப்பமாக இல்லை என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
தற்போதைய வானிலையில் இயற்கையாகவே தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், இதற்கு மனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முஹ்மட் தெரிவித்தார்.
சிலாங்கூரில் உள்ள காஜாங் பிரிமா மலைப் பகுதியில் நேற்று சுமார் 1.2 ஹெக்டேர் பரப்பளவில் காட்டுத் தீ பரவியதோடு, தீயை அணைப்பதற்கு 22 தீயணைப்பு வீரர்களும் நான்கு இயந்திரங்களும் தேவைப்பட்டதாக அவர் விவரித்தார். அதற்கு முன்னர், புக்கிட் ஜாலில் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு புதரில் தீ ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனால் அருகிலுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி நேற்று வரை, தோட்டங்கள் அல்லது பண்ணைகள், காடுகள், புதர்கள் உட்படுத்தி நாடு முழுவதும் மொத்தம் 7,223 தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
அதில் சிலாங்கூரில் அதிகமான அதாவது 1,364 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் பேராக்கில் 938, ஜோகூரில் 831, கெடாவில் 662, கோலாலம்பூரில் 113 மற்றும் லாபுவானில் 44 தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.







