பந்திங், ஆக. 22 - எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களிடையே நாட்டுப் பற்றை விதைக்கும் நோக்கில் பந்திங் சட்டமன்றத் தொகுதி தேசியக் கொடிகளை ஒப்படைக்கும் நிகழ்வை நடத்தியது.
இந்த கொடி ஒப்படைப்பு நிகழ்வில் பந்திங் சட்டமன்ற உறுப்பினரும் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கலந்து கொண்டார்.
பந்திங் தொகுதியில் உள்ள சுங்கை மங்கிஸ் தேசிய வகை தமிழ்ப்பள்ளி, தெலுக் டத்தோ மெதடிஸ்ட் தேசியப் பள்ளி மற்றும் தெலுக் புனுட் கா வா சீனப்பள்ளி ஆகியற்றுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை பறக்கவிடுவதை மட்டும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, பள்ளிப் பருவம் தொட்டு மாணவர்களிடையே நாட்டுப் பற்று உணர்வை வளர்க்க இது உதவும் என்றும் நம்பப்படுகிறது வீ.பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இத்தகைய முன்னெடுப்பின் மூலம் மாணவர்கள் ஒற்றுமையின் அர்த்தத்தையும் நமது நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
கம்பீரமான தேசியக் கொடி தேசிய இறையாண்மையின் சின்னம் மட்டுமல்ல. இனம் மற்றும் சமயத்தை தாண்டி அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் மலேசியர்களின் ஒற்றுமையின் சின்னமாகும் என பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இந்த முயற்சி சுதந்திர உணர்வைத் தொடர்ந்து தூண்டி சமூகத்தின் அனைத்து நிலைகளைச் சேர்ந்த மக்களிடையே குறிப்பாக எதிர்காலத்தில் நாட்டின் தலைவர்களாக உருவாகவிருக்கும் இளம் தலைமுறையினரிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.