மாஸ்கோ, ஆக. 8 - ரஷ்யாவுக்கான அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நேற்று தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையமான டோச்கா கிபெனியாவிற்கு வருகை மேற்கொண்டார்.
அம்மையத்திற்கு வந்த மாமன்னரை ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் ஆலோசகர் டிமிட்ரி பெஸ்கோவ் மற்றும் ஸ்கோல்கோவோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஸ்கோல்டெக்) மூத்த துணைத் தலைவர் அலெக்ஸி பொனோமரேவ் ஆகியோர் வரவேற்றனர்.
சுல்தான் இப்ராஹிமுடன் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டினும் இப்பயணத்தில் கலந்துகொண்டார்.
இந்த ஒரு மணி நேர பயணத்தின் போது, ரஷ்ய ட்ரோன் தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்தும் கண்காட்சியை மாட்சிமை தங்கிய பேரரசர் பார்வையிட்டார். அங்கு பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டு முன்னெடுப்புகள் குறித்து பெஸ்கோவ் பேரரசருக்கு விளக்கினார்.
இந்தக் கண்காட்சியில் பல்வகை பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு ட்ரோன்களும் இடம்பெற்றிருந்தன. ஆளில்லா வான்வழி அமைப்புத் துறையில் ரஷ்யாவின் வளர்ந்து வரும் ஆற்றலுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.