கோலாலம்பூர், ஆகஸ்ட் 5: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமீபத்தில் அறிவித்த அடிப்படை ரஹ்மா பங்களிப்பு திட்டத்தின் (SARA) கீழ் வழங்கப்படும் RM100 உதவியைப் பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த உதவியைச் சரிபார்க்கும் சாக்கில் தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களைப் பெற பொதுமக்களை ஏமாற்றுவதற்காக சில ஏமாற்று கும்பலின் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படும் என்று தனது தரப்பு எதிர்பார்த்ததாகப் புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) இயக்குனர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.
அக்கும்பல் பொதுவாக அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகளாக அடையாள காட்டிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொள்வர். அதன் மூலம் போலி செய்திகள் இணைப்புகளை குறுகிய செய்தி சேவை (SMS), வாட்ஸ்அப் பயன்பாடு அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் அனுப்பி பாதிக்கப்பட்டவர்களை கவர்ந்திழுப்பர் என்று அவர் கூறினார்.
"வங்கி கணக்கு எண்கள், அடையாள அட்டை எண்கள் அல்லது OTP குறியீடுகள் போன்ற தகவல்கள் பெறப்பட்டவுடன், சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரின் கணக்கை அணுகி, அவர்களுக்குத் தெரியாமல் பணத்தை மாற்றுவார்கள்" என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
இந்தத் திட்டத்தில் மோசடி நடந்ததாக இதுவரை எந்த காவல் துறையினருக்கும் புகார்கள் வரவில்லை என்றாலும், பொறுப்பற்ற தரப்பினர் தேவைப்படுபவர்களை குறிவைத்து சுரண்டுவதற்கான சாத்தியக்கூறுகளை அவரது தரப்பு தீவிரமாகக் கருதுகிறது.
எனவே, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
“உதவி வழங்கும் அரசு நிறுவனங்களிலிருந்து வருவதாகக் கூறும் அழைப்புகள், செய்திகள் அல்லது இணைப்புகளை எளிதில் நம்ப வேண்டாம். சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களை நிரப்பாதீர்கள்,” என்று அவர் கூறினார்.