கோலாலம்பூர், ஜூலை 5- நீண்ட தொலைவு பயணிக்கக்கூடிய ஏர்பஸ் 321எக்ஸ்எல்ஆர். விமானங்களை வாங்குவது தொடர்பில் ஏர்ஆசியா விமான நிறுவனம் 1,225 கோடி டாலர் (5,172 கோடி வெள்ளி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த விமானங்கள் வரும் 2028ஆம் ஆண்டுவாக்கில் விநியோகிக்கப்படுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோன் பெர்னாண்டஸ் கூறினார்.
ஐம்பது 321எக்ஸ்எல்ஆர் விமானங்களுக்கான கொள்முதல் தொடர்பில் அந்த குறைந்த கட்டண விமான நிறுவனம் நேற்று பாரிஸில் ஏர்பஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதோடு மேலும் 20 321எக்ஸ்எல்ஆர் விமானங்களுக்கான உரிமையையும் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த புதிய விமானங்கள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு சேவையை மேற்கொள்வதை இலக்காக கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் 321எக்ஸ்எல்ஆர் விமானங்களுக்கான மிகப்பெரிய பயனீட்டாளர்களாக எங்களை மாற்றும். உலகின் முதல் குறைந்த விலை பல்முனை ஒருங்கமைப்பு விமான நிறுவனத்தை உருவாக்கும் நோக்கிலான எங்களின் வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக இது விளங்குகிறது என அவர் கூறினார்.
ஐரோப்பாவுக்கு சேவையை விரிவுபடுத்த இந்த கொள்முதல் எங்களுக்கு உதவும். மேலும், இவ்வாண்டு ஐரோப்பாவிற்கான முதல் பயணச் சேவையை தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று நேற்று ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வுக்கு பின்னர் நடைபெற்ற இயங்கலை வாயிலான செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.